Sunday, 25 August 2024
இன்றடிக்கும் காற்று
நீர்த்துளி
கனவிலே எழுதி மடித்த கவிதை:
(வரிகள் உபயம்: கனவுப் புலவன்)
நீர் ஓர்துளியில் கருவாகி ஒரு
நீர் சூழ்நிலையில் உருவாகி அந்த
நீர்ப் புறந்தள்ளிட வெளியாகி பின்னொரு
நீர் உட்சென்றிடப் பெரிதாகி உயிர்
நீர் பருகிடவே சவமாகிப் பின்
நீர்க் கடன் முடித்திட எரியாகி ஒரு
நீர் வழித்தடத்தில் கரைந்திடும் வாழ்வில்
நீர்த் தலையுடையிறையை நினைந்தாங்கோர்
நீர்ப் பஞ்சணை துயில்வனைப் பணிந்திடக் கண்
மரத்தின் கோரிக்கை
கனவிலே எழுதி மடித்த கவிதை-12:
பிப்ரவரி 20, 2018
தாளனைய நாவாலே தரைநீரைத்
தானுண்டு தலைநிமிர்ந்து பின்னும்
தன்னுடலுங் கரமுந்தான் மலர்ந்து
பின்னே பிஞ்சாகிக் காயாகித்
தான் பின்னே நற்கனியுமாகித்
தான் பெற்ற செல்வந்தனைத்
தானே யுண்டதில்லை என்றும்
தன்பாற் கல்லெறிந்தோர்க்குத்
தாழாதே கனியுதிர்க்கும் எஞ்ஞான்றும்
தான்பட்ட கல்லடிக்காய்த்
தன்பொருட்டு கண்ணீர் உதிர்க்கா
வத்தருவன்ன எம்மனது என்றென்றும்
என்பாற் பலன்வேண்டி கல்லெறிவோர்க்கும்
என்பொருட்டு யான் கண்ணீர் உதிர்க்காது
அன்பெனும் கனியுதிர்ப்பேன் எஞ்ஞான்றும்
தெம்பாக நானிங்கு உள்ளவரை
தென்பாற் பயணம் செல்லும்வரை!
- உங்கள் மீது அன்புகொண்ட மனமரம்
பி.ஜெயராமன்.
Thursday, 12 August 2021
கனவிலே எழுதி மடித்த கவிதை
முற்றத்தில் நிலவொளி படர்ந்திருக்க
சித்தத்தில் அவனினைவு தொடர்ந்திருக்க
அற்றைத் திங்கள் மெல்ல குறைந்திருக்க
நெற்றித் திலகத்தோன் உள்ளம் நிறைந்திருக்க
ஒற்றையில் நிற்பவளை அவன் நோக்கினான்
சித்தத்தின் அச்சந்தனை அவன் போக்கினான்
தண்முத்தத்தில் புதுமச்சங்கள் உருவாக்கினான்
நித்திலங்களொடு விண்ணரை நிலவு
மெத்தைதனை நாடியது அரைமனதொடு
காத்திருந்த பொழுது நெடும் பொழுதாக
பார்த்திருக்கும் பொழுது நொடிப் பொழுதாக
தோற்றம் தந்ததே மனதில் மாற்றம் தந்ததே!
Sunday, 8 November 2020
கனவிலே எழுதி மடித்த கவிதை
திரையாழி மேற்துயிலும் திருமாலே பெருமாளே
ஒரு ஆழி கீழ்ப்பட்ட மறைமீட்ட பெருமாளே
துயராழி தான்தீர்க்க தூண்பிளந்த பெருமாளே
கணையாழி ஈந்தாங்கோர் உயிர்காத்த பெருமாளே
ஒருஆழி கடந்தாங்கே சிறைமீட்ட பெருமாளே
பிறவாழி யாம்கடக்க அருள்வாயெம் பெருமாளே!